2011/02/18

வரதட்சணை கொடுமையால்

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை! கணவன்- மாமனார், மாமியாருக்கு 13 ஆண்டு ஜெயில்; திருவள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு

 
திருவள்ளூர் அடுத்த மணவூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மகன் சாலமன் ராஜேஷ். இவருக்கும், திருவாலங்காடு எல்.ஜி.புரத்தை சேர்ந்த யாகூப் என்பவர் மகள் சுமத்ரா என்பவருக்கும் கடந்த 9-2-2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சுமத்ராவின் பெற்றோர் போதுமான நகை, சீர்வரிசை செய்திருந்தனர்.

இந்நிலையில் திருமணமான ஒரு சில மாதங்களில் பெற்றோர் வீட்டுக்கு சென்று அடிக்கடி பணம், பொருட்கள் வாங்கி வருமாறு சுமத்ராவை, கணவன் சாலமன் ராஜேஷ் அவரது தந்தை தேவதாஸ், தாய் பிளைசி ஆகியோர் தொல்லை கொடுத்து வந்தனர்.

இதில் மனம் உடைந்த சுமித்ரா கடந்த 6-9-2005-ல் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை யாகூப், திருவாலங் காடு, போலீசில் “தனது மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டதாக” புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவர் சாலமன் ராஜேஷ், தேவதாஸ், பிளைசி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் ஸ்ரீதர் ஆஜரானார்.

வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி ஹேமலதா நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், சுமத்ராவை வரதட்சணை கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய கணவர் சாலமன் ராஜேஷ், மாமனார் தேவதாஸ், மாமியார் பிளைசி ஆகிய 3 பேருக்கும் 10 ஆண்டு சிறைதண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் சித்ரவதை செய்த குற்றத்திற்காக தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரையும் போலீசார் பாதுகாப்புடன் அழைத்து சென்று புழல் ஜெயிலில் அடைத்தனர்.

 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக